தினை லட்டு
தேவையான பொருட்கள் :
தினை, ரவை - தலா 100 கிராம்.
நெய் - 100 கிராம்,
சர்க்கரை - 200 கிராம் (பொடித்தது),
பாதாம் பருப்பு அல்லது முந்திரி-தேவைக்கு ஏற்ப,
ஏலக்காய் தூள்- சிறிது,
தேன் - 100 கிராம்.
செய்முறை
காதி கடைகளில் தினை அரிசி என்று கிடைக்கும் (உடைத்த ரவை மாதிரி இருக்கும்). தினையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ரவையையும் வறுக்கவும். பின் ஆற வைத்து ரவை, தினை, ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். பின் சர்க்கரையையும் சேர்த்து அரைக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். சிறிது நெய்விட்டு முந்திரிப் பருப்பையும் ஒன்றிரண்டாக உடைத்து வறுத்து சேர்க்கவும். பின் நெய்யை நன்றாக சூடு செய்து கலவையில் கொட்டி கலந்து, தேன் சேர்த்து கலந்து சிறு, சிறு உருண்டையாகப் பிடித்து பரிமாறவும்.
தினை இனிப்புப் பொங்கல்
தேவையானவை:
தினை அரிசி-200 கிராம்,
பாசிப்பருப்பு-, 100 கிராம்,
நெய்-4 தேக்கரண்டி,
முந்திரி, திராட்சை-தலா 25 கிராம்,
ஏலக்காய்-3,
வெல்லம் அல்லது பனைவெல்லம்-250 கிராம்.
செய்முறை:
தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு பங்கு தினை அரிசிக்கு, நாலு பங்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் கலந்து, நன்றாக வேக வைக்க வேண்டும். முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் அல்லது பனை வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, வேகவைத்த தினைச் சோறில் கலந்து, வறுத்த முந்திரி, திராட்சையுடன் ஏலக்காயை இடித்துப் போட்டு கிளறினால், பொங்கல் தயார்.
குறிப்பு: கடைகளில் தினை அரிசி என்று கேட்டு வாங்க வேண்டும். தினை என்று வாங்கினால், அது தோலோடு இருக்கும். அதை நீக்குவது கடினமான வேலையாக இருக்கும். தினை அரிசி காதி கிராஃப்ட் உள்ளிட்ட கடைகளில் கிடைக்கும்.
தினை பாயசம்
தேவையானவை:
பாசிப்பருப்பு- 50 கிராம்,
தினை- 100 கிராம்,
நெய்- 2 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை- 25 கிராம்,
வெல்லம்- 150 கிராம்,
பால்-200 மில்லி,
தேங்காய் துருவல்-கால் மூடி.
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, 1 பங்குக்கு 5 பங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, வேக வைத்த கஞ்சியில் ஊற்றவேண்டும். இறுதியாக, பால், தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை இட்டுக் கிளறி லேசாகக் கொதிக்கவிட்டால், பாயசம் தயார்.
திடை அடை
தேவையான பொருட்கள் :
வறுத்த தினை மாவு 25 கிராம், வெல்லம் 20 கிராம், வறுத்த கடலை புண்ணாக்குத் தூள் 25 கிராம், டால்டா சில தேக்கரண்டி அளவு.
செய்முறை
எல்லாவற்றையும் வெல்லத்துடன் சேர்த்துப் பிசைந்து கொண்டு சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு எண்ணெய் தடவிய வாணலியில் ஒவ்வொன்றையும் அடைபோல் தட்டி இரண்டு புறமும் நன்றாக வேகவைத்து சூடு தணிந்த பின் சாப்பிட வேண்டும்.
சாமை, தினை அரிசி அடை
தேவையானவை:
சாமை, தினை அரிசி - தலா 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 1, மிளகு - 20,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
சாமை, தினை, மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும்.
மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.
திணை இட்லி
தேவையானவை :
தினை 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், தேவையான உப்பு.
செய்முறை
தினையையும், கடலைப் பருப்பையும் நன்றாக அரைத்து மாவாக்கி கூழ் பதம் செய்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் இட்லிபோல் அவித்துச் சாப்பிடலாம்.
திணைக்கஞ்சி
தேவையானவை :
(வறுத்த) தினைமாவு 50 கிராம், (வறுத்த) கடலைப் பிண்ணாக்கு மாவு 25 கிராம், (வறுத்த) மொச்சைப் பருப்பு மாவு 15 கிராம், வெல்லம் 20 கிராம்.
செய்முறை
வெல்லப்பாகு தயாரித்துக் கொண்டு, மாவுகளை நீரில் ஒன்றாகக் கலந்து, நன்கு பிசைந்து வைத்துக்கொண்டு பின்பு அந்தக் கலவையை வெல்லப்பாகுடன் கிளறிக் கொண்டே சேர்க்க வேண்டும்.
பின்னர் சுமார் 25 நிமிடங்கள் வரை அடுப்பில் மேல் வைத்திருந்த பின் இறக்கி, வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடலாம்.இவை குறைந்த விலையில் கூடுதலான சத்துணவு பெறும் முறையாகும்.
தினை தோசை
தேவையானவை :
தினை 1 கப்
புழுங்கலரிசி 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:
தினையை தனியாக இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு,வெந்தயம் மூன்றையும் தனித்தனியே மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த தினை,புழுங்கலரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் (தண்ணீருடன் சேர்த்து) எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவு நான்கு மணிநேரத்தில் புளித்துவிடும்.பின்னர் தோசையாக வார்க்கலாம்.
இதற்கு இஞ்சி,பச்சைமிளகாய்,தேங்காய் சேர்த்து அரைத்த சட்னி பொருத்தமாக இருக்கும்.
தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.
தினை உப்புமா
தேவையானவை:
தினை நொய்: - பம்பாய் ரவை மாதிரி கிடைக்கும் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது
காரட் - தோல் சீவி க்யூப்களாக நறுக்கியது
பீன்ஸ் - 2 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நீள வர மிளகாய் - 4 (பச்சை மிளகாய் பத்திய சமையலில் சேர்க்கக் கூடாது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
ஒரு ஆர்க்கு கருவேப்பிலை /கொத்தமல்லி
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்
செய்முறை:
அடிகனமான வாணலியில் வெறுமனே (எண்ணெய் விடாமல்) தினையை சிவக்க வறுத்துக்கொண்டு தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்துக் கொள்ளவும்.
ஒரு தனி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு-உளுத்தம் பருப்பு- வர மிளகாய் தாளித்து, கருவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை வதக்கி கொண்டு கறிகாய்களை ஒவ்வொன்றாக சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
கொதித்த நீரை இதில் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து, பின்பு வறுத்த தினையை சேர்த்து, கட்டி தட்டி கொள்ளாமல் கிளறி விட்டு, சரியாக ஐந்து நிமிஷம் மூடி வைக்கவும். உதிர் உதிராக வெந்திருக்கும். சாப்பிடும் முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கருப்பட்டி தினை அப்பம்
தேவையானவை:
கருப்பட்டி – 100 கிராம்,
தினை மாவு – 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 100 மில்லி,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.
செய்முறை:
கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பத்தை தயாரிக்கவும்.
குறிப்பு:
மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டும் தயாரிக்கலாம்.
தினை நொய் என்றால் என்ன பம்பாய் ரவை மாதிரி கிடைக்கும் என்றால் என்ன புரியவில்லை.உப்மா செய்து பார்த்தோம் வேகவே இல்லை அப்படியே இருக்கிறது கடையில் வாங்கி உப்புமா செய்துவிட வேண்டுமா இல்லது பம்பாய் ரவை என்று கேட்கவேண்டுமா தெளிவாக சொல்லுங்கள் பதில் அளியுங்கள்
ReplyDelete