158 வயது நீராவி ரயில் இன்ஜின் புதிய தலைமுறையினர் பார்த்து ரசித்தனர்
சென்னை : 67வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 158 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி ரயில் இன்ஜின் பொதுமக்கள் பார்வைக்காக இயக்கப்பட்டது. ரயில்வே துறையினர் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். 1855ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த நீராவி இன்ஜின் பெயர் இ.ஐ.ஆர் 21. இதன் தற்போதைய வயது 158 ஆண்டுகள். 1909ம் ஆண்டு வரை பணியாற்றியது.
நீராவி இன்ஜின் ஓய்வு பெற்றபிறகு மீட்டர்கேஜ், பிராட்கேஜ் என்று மின்சார ரயிலை பார்த்த இந்த தலைமுறையினர், புகையை கக்கி கொண்டு சிக்.சிக் என சப்தத்தை எழுப்பி சென்ற நீராவி ரயில் இன்ஜினை பார்த்து ரசிக்க, ரயில்வே துறையினர் நேற்று இயக்கினர். சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், கிண்டி வரை சென்றது.
மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த நீராவி ரயில் இன்ஜினை தென்னக ரயில்வே துறையின் பொது மேலாளர் நாராயணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்திருந்த பயணிகள் இந்த ரயிலை ஆச்சரியமாக பார்த்தனர்.
நீராவி மூலம் இயங்கிய இந்த ரயிலில் அதிகாரிகள், சிறுவர்கள், இளைஞர்கள் பயணம் செய்தனர். இந்த பயணம் தங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது என்றனர். எழும்பூரில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்ட ரயில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக 15 நிமிடங்கள் நின்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12.30 மணி அளவில் கிண்டி ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கும் ஏராளமான பொதுமக்கள் அந்த ரயிலை பார்த்து ரசித்தனர்.
No comments:
Post a Comment