Monday, 18 November 2013

பழங்களை இப்படித்தான் சாப்பிடணும்



எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.

அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்:

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.

பழங்களை ஜூஸாக குடிப்பதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும்போதுதான் நார்ச்சத்தும் கிடைக்கிறது. சத்தும் முழுமையாக கிடைக்கிறது.

நன்றி : tamil.webdunia.com

பப்பாளி பழம் - நன்மைகள்




மற்ற பழங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பப்பாளி பழத்தில் தான் மிகுதியான உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இதய குழாய்கள் முதல் பெருங்குடல் வரை பல நன்மை இருக்கிறது. 

இது அனைத்து காலங்களிலும் மலிவாக கிடைக்கின்ற பழமாகும்.



அடங்கியுள்ள சத்துக்கள்

  • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.
  • விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
  • கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.
  • பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.


மருத்துவப் பண்புகள்

  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தென்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
  • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
  • பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
  • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
  • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.    உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
  • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
  • ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

நன்றி : தமிழ் விக்கிமீடியா (பப்பாளி)




கேரட் கீர் ,அன்னாசிப் பழ கீர் ......


கேரட் கீர் : 
தேவையான பொருட்கள் : பால் - ஒரு லிட்டர், துருவிய கேரட் - 11/2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய ரவை - 3 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - சிறிது, குங்குமப்பூ - சிறிது.
செய்முறை : துருவிய கேரட்டை பாலில் நன்கு மென்மையாகும் வரை வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறி விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கட்டி தட்டாதபடி, பாலுடன் கலக்கவும். இத்துடன் முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கலவை திக்காகும் வரை கொதிக்க விடவும். பிறகு சிறிது இளஞ்சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, இறக்கும்முன் சேர்க்கவும். இதனைக் குளிர வைத்து பரிமாறவும்.
அன்னாசிப் பழ கீர் 
தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த அன்னாசிப்பழம் - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், பாதாம் பருப்பு - 50 கிராம், பால் - 1/2 லிட்டர், பேரீச்சம்பழம் - 100 கிராம், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை -தலா 25 கிராம், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் பொடி - லு டீஸ்பூன்.
செய்முறை : அன்னாசிப்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.பேரீச்சம்பழத்தையும் கொட்டை நீக்கி நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, சாறை வடித்தெடுக்கவும். இதில் சர்க்கரையைக் கலந்து அடுப்பில்வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். பழச்சாறு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும். பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி மையாக அரைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி அத்துடன், அரைத்த பாதாம் பருப்பு, பழச்சாறு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் கிளறி கீழே இறக்கிப் பரிமாறவும். 
கோதுமை கீர் 
தேவையான பொருட்கள் : உடைத்த கோதுமை - 50 கிராம், சர்க்கரை - 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 21/2 கப், தண்ணீர் - ஒரு கப், க்ரீம் - 1/2 கப், ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 25 கிராம், வெள்ளித்தாள் -2, நெய் - 3 டேபிள் ஸ்பூன், உலர் திராட்சை, பிஸ்தா பருப்பு - தலா 10 கிராம், பன்னீர் - சில துளிகள்.
செய்முறை : நெய்யில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மூன்றையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.அதே நெய்யில் உடைத்த கோதுமையைக் கொட்டி லேசாக நிறம்மாறும் வரை வறுத்து அத்துடன் ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தண்ணீர் விட்டு வேக விடவும். வெந்தபின் அடுப்பிலிருந்து இறக்கி, பால், பன்னீர், க்ரீம், பொரித்த பருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். இதன் மீது வெள்ளித் தாளை விரித்து அலங்கரித்து சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறவும். 
பழக்கலவை சேமியா கீர் 
தேவையான பொருட்கள் : பால் - 6 கப், பொடியாக நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் (சேர்த்து) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய உடைத்த சேமியா, ஒரு கப் க்ரீம் - ஒரு கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை : சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். அத்துடன் வறுத்த சேமியா சேர்த்து, வேக விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி க்ரீம், பழக்கலவை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஃப்ரிட்ஜில் ஒருமணி நேரம் வைத்துப் பரிமாறவும். 
பாதாம் கீர்
தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - ஒரு கப், பால் - 3 கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 25 கிராம், சாரப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், பச்சைக் கற்பூரம், கேசரிக்கலர் - சிறிதளவு.
செய்முறை : முந்திரிப் பருப்பு, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு மூன்றையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கி தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அதனை 3 கப் நீர் விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் கிளறவும். பச்சை வாசனை மாறியதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றவும்.பிறகு மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியாக வந்ததும் கீழே இறக்கவும். இதனை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறலாம். 
உளுத்தம் கீர் 
தேவையான பொருட்கள் : பால் - 250 மி.லி, உளுத்தம் பருப்பு - 100 கிராம், பச்சரிசி (அ) பாஸ்மதி அரிசி - 100 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், துருவிய வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்ப் பொடி, கேசரிக் கலர், நெய், சுக்குப்பொடி - தலா 1/2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு- தேவையான அளவு.
செய்முறை : உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும்.ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். அதில் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிபிடிக்காமல் கிளறவும்.கூடவே வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும். இந்த உளுத்தம் கீர் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்

Monday, 11 November 2013

இனிப்பு வகைகள்


பால் அல்வா

தேவையானவை

காய்ச்சிய பால் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6

செய்முறை:

கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிளறவும்.

பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும். 

பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

இதனை சூடாகவும் பரிமாறலாம், ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.


தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்:
துருவிய உலர்ந்த தேங்காய் - 3 கப் சர்க்கரை - 2 கப் பால் - 1 கப்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை சேர்த்து கிளறி, தேங்காயானது பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கிளறிக் கொண்டே இறக்க வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, அதனை இறக்கி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்பு கலவையானது வெதுவெதுப்பாக ஆனப் பின்னர், அதனை உருண்டைகளாகப் பிடித்து, தனியாக ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிர வைத்தால், சூப்பரான தேங்காய் லட்டு ரெடி.

சாக்லெட் பர்பி
தேவையானவை 
மைதா - 3/4 கப் 
கோகோ பவுடர் - 1/2 கப் (அ) சாக்லெட் பார் (பெரியது) - 1 
சர்க்கரை - 11/2 கப்,
நெய் - 1 டீஸ்பூன், 

செய்முறை 
அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் மைதாவை போட்டு நன்றாக வறுக்கவும்.

இந்த கலவையை தனியாக வைத்து மற்றொரு பாத்திரத்தில் சக்கரை பாகு செய்துக்கொள்ளவும்.

இந்த சக்கரை பாகில் கோகோ பவுடர் (அ) துருவிய சாக்லெட், வறுத்த மைதா ஆகிவற்றை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு தட்டின் மீது கொட்டி, சமமாக பரப்பி சிறிது நேரம் கழித்து துண்டுகளாக வெட்டினால் சுவையான சாக்லெட் பர்பி தயார். 

பன்னீர் கோகனட் லட்டு

பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புது புதுமையான இனிப்பு வகையை மிக சுலபமாக செய்து விடலாம். பன்னீர், அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை 
பன்னீர் - 250 கிராம், 
பொடித்த சர்க்கரை - 1/4 கப் 
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள் 
தேங்காய் - ஒரு மூடி 
சர்க்கரை - 1/2 கப் 
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை
பன்னீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்துப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டவும்.

தேங்காயைத் துருவி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை உருகி, இளகி சற்று சேர்ந்தால்போல வரும்போது, இறக்கி விட வேண்டும்.

அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணம் போலச் செய்து, அதனுள் பன்னீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி, உருட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.


பாசிப்பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள்: 
பால் - 2 1/4 கப், பாசிப்பருப்பு - 1/3 கப்,
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப், துருவிய தேங்காய் - 1/4 கப்,
 அரிசி மாவு - 2 டீஸ்பூன், ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன், முந்திரி - 6,  நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் வெல்லத்தை குறைவான தண்ணீரில் போட்டு கரைய வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். 
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பின்பு அதே வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உடனே தண்ணீர் ஊற்றி, பின் தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பிறகு துருவிய தேங்காய் மற்றும் அரிசி மாவை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் மற்றும் அரிசி மாவை போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். 
  • பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பு, அரிசி மாவு கலவை, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 
  • அடுத்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து அனைத்து பொருட்களும் ஒன்று சேர நன்கு கிளறி விட்டு இறக்கி, நன்கு குளிர விட வேண்டும். 
  • பின்னர் கடாயில் பாலை ஊற்றி, பால் நன்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு, பாலானது நன்கு சுண்டியதும், அதில் குளிர்ந்த வெல்லக் கலவையை சேர்த்து, பின் முந்திரியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி
திணை சக்கரை பொங்கல்

தேவையானவை 

திணை - 3/4 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன் 
நெய் - தேவைகேற்ப 
உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு 

செய்முறை 

திணை மற்றும் பாசி பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும் 

குக்கரில் வறுத்த திணை, பாசிபருப்பை 3 கப் தண்ணீரில் 4 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும் 

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

பருப்பு கலவை நன்கு வெந்ததும் அதனோடு வெல்ல பாகு,ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கவும் 

ஒரு வானலியில் நெய் ஊற்றி, உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை நிறம் மாறும்வரை வறுத்து திணை சக்கரை பொங்கலுடன் சேருங்கள்.





தினமும் ஒரு கப் காரட்- கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது!


தினமும் ஒரு கப் காரட்- கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது!

பீட்டா கரோடின் என்ற சத்தின் மூல ஊற்று காரட் என்றால் மிகையாகாது வைட்டமின் ஏ-யின் முன்னோடி பீட்டா கரோடின் இது காரட்டில் அதிகம் உள்ளது.

உணவு சீரணத்திற்கு காரணமாகும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகள் காரட்டில் உள்ளது. மாலைக் கண் நோயை தடுக்கவல்லது காரட்.

ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த சத்துக்களெல்லாம் அதில் இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சருமத்தில் லேசான மஞ்சள் தன்மை ஏற்படும். பச்சை காரட்டில் உள்ள பீட்டா கரோடினை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதினால் இருதய நோய்களைத் தடுக்க முடியாது. பச்சை காரட்தான் நல்லது.

பீட்டா கரோடின் நம் உடலில் வைட்டமின் ஏ-யாக மாற்றமடைகிறது. அதிக பளபளப்பு இருக்குமேயானால் பீட்டா கரோடின் சத்தும் அதிகமாக இருக்கிறது என்று பொருள்.

சமைக்கப்பட்ட ஒரு கப் காரட்டில் 70 கலோரிகள் உள்ளன. 4கிராம் நார்சத்தும், சுமார் 18மிலி கிராம் பீட்டா கரோடினும் உள்ளது. வைட்டமின் ஏ உணவில் எவ்வளவு இருக்கவேண்டும் என்ற அளவிற்கு இது மிகத்துல்லியமாக பொருந்தக்கூடியது. ஆரோக்கியமான தலை முடி, சருமம், கண்கள், எலும்புகள், சளிச்சவ்வு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மேலும் கிருமிகளிலிருந்தும் காக்கிறது வைட்டமின் ஏ.

தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் 3வாரங்கள் அளவில் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

நமது பொதுப்புத்தி புரிதலுக்கேற்ப காரட் சாப்பிட்டால் கிட்டப்பார்வை, தூரப்பார்வை ஏற்படாது என்று தவறாக நினைத்து விடக்கூடாது. ஆனால் காரட்டில் உள்ள சத்து இல்லாததால் மாலைக் கண் நோய் ஏற்படலாம்!

சில தினங்களுக்கு ஒரு முறையாவது காரட் எடுத்துக் கொண்டால் மாலைக் கண் நோயை தடுக்கலாம். அதாவது மாலைக் கண் நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் வருகிறது என்ற நிலையிருக்கும்போது மட்டும் காரட் பயனளிக்கும்.

காரட்டை நறுக்கி, சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கிறது. அதாவது அதன் கடினமான செல் சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோடின் சமைக்கும்போது வெளிப்படுகிறது.

காரட்டுடன் வெண்ணெய் சிறிதளவு சேர்த்து எடுத்துக் கொண்டால் பீட்டா கரோடின் சத்தை உடல் நன்றாக உறிஞ்சி உள்ளே எடுத்துச் செல்லும்.

பீட்டா கரோடின் மட்டுமல்லாது ஆல்பா கரோட்டின், பயோ ஃபிளாவனாய்ட்ஸ் ஆகியசத்துகளும் உள்ளன. காரட்டில் உள்ள ஒட்டுமொத்த சத்துக்களை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதால் பயனில்லை. இன்னும் கூறப்போனால் மாத்திரை வடிவில் பீட்டா கரோடினை எடுத்துக் கொள்வது புகைப்பிடிப்பவர்களுக்கு தீங்கு கூட இழைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.